Friday, May 30, 2014

மோடி உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

      மோடிக்கு இரத்தினக்கம்பளத்துடன் பிரதமர் பதவி கிடைத்து இருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பிரதமர்களுக்கு தண்ணி காட்டிய பெரும்பான்மை மோடிக்கு கிடைத்து இருக்கிறது. இது அவருக்கு அக்கினி பரீட்சைதான்.
     "மண்ணு"மோகன் சிங் குக்கு கிடைத்த எஸ்கேப் பாயிண்ட் இவருக்கு இல்லை. சோனியா என் கைகளை கட்டி வைத்து இருந்தார் என்று அவர் சொல்லாவிட்டாலும் நாமாகவே சொல்லிக் கொண்டோம். அப்பாவி இமேஜை எப்படியோ காப்பாற்றி கொண்டு விட்டார். காங்கிரஸ் ஆட்சியினால் நொந்து போய் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் மன்மோகன் மேல் பெரிய அதிருப்தி இல்லை என்றுதான் கூறுவேன். ஆனால் மோடியின் நிலை அப்படி இல்லை. அவரை அப்பாவி என்றால் அவரே சிரித்துவிடுவார்.
      நாடு அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை அதீதமானது. எப்படி இந்த நிலையை உருவாக்கினார் என்பது கடந்த இரண்டு ஆண்டு காலமாக அவர் வகுத்த அரசியல் வியுகங்களையும், அவரது சந்தைப்படுத்தும் திறனையும் கவனித்தவர்களுக்கு தெரியும். அதன் அடிப்படையிலேயே இந்த நிமிடம் வரையிலான அவரின் அரசியல் வரலாற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட எனது எளிய மதிப்பீட்டின்படி அவர் ஒரு சராசரிக்கு கொஞ்சம் மேலான அரசியல்வாதியே தவிர நாட்டை காக்கவந்த மீட்பர் என்று எல்லாம் சொல்ல முடியாது. ஒரு சராசரி அரசியல்வாதி பதவியை அடைய என்னவெல்லாம் செய்வாரோ அவை எல்லாவற்றையும் செய்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.
     ஆனால் அவர் நினைத்தால் வல்லரசு இந்தியாவின் சிற்பி என்ற பட்டத்தை போகிற போக்கில் தட்டி கொண்டு செல்ல முடியும். எதிர்காலத்தில் மோடியை நாம் ஜார்ஜ்வாஷிங்டன், லிங்கன், லீ க்வான் யூ வரிசையில் வைக்க கூட வாய்ப்புகள் பிரகாசமாக உண்டு. ஆனால் இதெல்லாம் அவருக்கு தோன்ற வேண்டும்.
     ஒரு சாமானியனின் எதிர்பார்ப்பில் மோடி உடனடியாக கவனிக்க வேண்டியதாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

1) விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்கள். (இலவச இளிச்சவாயதனங்கள் அல்ல.) பாசன வசதி, சந்தையாக்கம், நதிநீர் பங்கீடு முதலியவற்றில் மத்திய அரசு அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ அதை செய்வது.

2) இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது குறித்து திடமான நேர்மையான முடிவுகள் எடுத்தல். தண்டகாரண்யம் நிலக்கரி சுரங்கம், தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுத்தல் போன்றவை சம்பந்தமாக வெள்ளை அறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். Eco System பாதிக்கும் என்ற பட்சத்தில் தாட்சண்யம் பார்க்காமல் திட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். காடுகள், ஆறுகள், மற்ற இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

3)  இலங்கை, பாகிஸ்தான், சீனா உறவுகள் குறித்த சாத்தியங்கள் நேர்மையான முறையில் பரிசீலிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தென்னிந்தியாவிலும் தீவிரவாதம் தலைதூக்க வாய்ப்புகள் உண்டு.

4) மாநில அரசுகளோடு இணைந்து பெட்ரோல்,உணவு, மருத்துவப் பொருட்களின் விலைவாசி முறைப்படுத்தல்

5) உண்மையான, நிலையான வேலை வாய்ப்புக்கான சாத்தியங்களை ஆராய்தல். சுய வேலை வாய்ப்புக்கான ஒத்துழைப்பு ( ஒற்றை சாளர முறை, கடன் பெரும் முறையை எளிமை ஆக்குதல் போன்றவை)

6) பன்னாட்டு நிறுவனங்களை ஒரு வரம்புக்குள் முறைப்படுத்தி, அவற்றின் தொழிலாளர் நலன் குறித்த கொள்கைகளை தொடர்ந்து கண்காணித்தல். இதை செய்யாததால் தான் நமது வாழும் முறையில் பெரும் மாறுதல் (கேடு) அடைந்திருக்கிறது. நாம் இயந்திரங்களாக மாற்றப்பட்டு உள்ளோம். நமது நாட்டின் மொத்த மனித வளமும் சுரண்டப்பட்டு கொரியாவுக்கும், UK, US க்கும் கொளுத்த பணமாக சென்றடைகிறது. பிச்சைக்கார அரசின் அமைச்சர்கள் எலும்புத்துண்டை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டு, TDS ஐ இன்னும் எப்படி எல்லாம் கறாராக வசூலிக்கலாம் என்று யோசித்து சட்டம் போடுகிறார்கள்.

7)  வேளாண் நிலங்களை அழித்து ரியல் எஸ்டேட் கொள்ளை போன்றவை மத்திய அரசின் வரம்புக்குள் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இவை அண்டை நாடுகளின் பகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோடு சேர்ந்து கட்டாயம் இதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

இவை எல்லாம் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகள்தான். ஆனால் இவை எல்லாம் மிக அவசியமானவை. துருப்பிடித்த அரசு இயந்திரம் மற்றும் அதன் அங்கத்தினர்கள் அவ்வளவு எளிதாக எதையும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள், மாற்ற விடவும் மாட்டார்கள்.

எனக்கு கொரியன்களை பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கும். தேச பக்தியை அவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இங்கு அவர்களின் அலுவலகங்களில் பயன்படும் சிறிய பின் கூட கொரியா தயாரிப்பாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். தரம் எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

அத்தகைய மனோ நிலை 30% இந்தியர்களிடம் இருந்தால் கூட மோடி தனது லட்சியமாக கூறிகொள்பவை மிக எளிதாக நிறைவேறி விடும்.

     

Friday, May 16, 2014

பாராளுமன்ற பொது தேர்தல் - 2014

    வந்து விட்டது தேர்தல். இனி சிறிது நாட்கள்  கூத்துகளுக்கு பஞ்சமே இருக்காது. அரசியல் வியாதிகள் நடத்தும் நாடகங்கள்  ஒருபக்கம் என்றால் அவர்களுக்கு இணையாக சில சமயம் அதிகமாகவே வாக்காளர்களும், பத்திரிகைகள் மற்றும் பிற ஊடகங்கள் அடிக்கும் அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கும்.

பாராளு மன்ற தேர்தல் என்பதால் தேசிய அளவில் பேரங்களும், வியுகங்களும் அனல் பறந்து கொண்டு இருக்கும். தமிழ்நாட்டின் நிலவரத்தை கடந்த ஒரு மாதம் மேலோட்டமாக கவனித்ததிலேயே எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.

    வழக்கம் போல கட்சிகள் புதிய தர்மங்களையும், கொள்கைகளையும் வகுத்துக்கொண்டு
கூட்டணி கடையை விரிக்க ஆரம்பித்து விட்டன. இந்தியாவின் பாரம்பரிய அடையாளமான காங்கிரஸ் சீந்துவாரின்றி கிடக்கிறது. மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிக்க அவர்களிடம் எதுவுமே இல்லை. ஆனாலும், ஆட்டையில் மிகுந்த ஆசையுடன் கலந்து கொள்கிறார்கள்... மானம்கெட்டத்தனத்தின் உச்சம்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திரவிடக்கட்சிகளுக்கு மாற்றாய் இருப்பார் (இருக்க வேண்டும்) என எதிர்பார்த்து மக்களே மகுடம் சூட்ட தயாராய் இருந்த போதும் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து தன் டவுசரை தானே கிழித்துக்கொண்டார் விஜயகாந்த். அவர்  இப்போது பி.ஜே.பி. யிடம் கெத்து காண்பித்து கொண்டு இருப்பது ஆச்சர்யம். மோடி அலை இந்தியா முழுவதும் சுனாமி போல சுழன்று அடிப்பதாகச் சொல்லும் (ஓரளவு உண்மையும் கூட) பி.ஜே.பி.யும் அவரை பிடித்து தொங்கி கொண்டிருப்பது அதை விட ஆச்சர்யம். இதற்க்கு பதிலாக தனியே நின்று தமிழ் நாட்டில் தங்கள் பலத்தை சோதித்துக்கொள்ளலாம். கண்டிப்பாக நல்ல பலன் இருக்கும். அப்படியே தே.மு.தி.க கணிசமான தொகுதியை கைப்பற்றினால் கூட அந்த நேரத்தில் கூட்டணி அமைத்தால் போயிற்று.. என்ன சில அமைச்சர் பதவிகளை கொடுக்க வேண்டி இருக்கும். அது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் எனக்கு என்னவோ தே.மு.தி.க தனியாக நிற்பது அவர்களுக்குத்தான் ரிஸ்க் என்று தோன்றுகிறது. ஆகையால் பி.ஜே.பி விஜயகாந்த் விஷயத்தில் கறாராகவே நடந்து கொண்டிருக்கலாம்.

ஜெ.ஜெயலலிதா
எப்பொழுதுமே எனக்கு அதிசயமாகத்தான் தெரிகிறார். கீழ்க்கண்ட காரணங்களால்..

1) இளம்வயதில் இருந்து அரசியலுக்காக தயாரிக்கப் பட்டவர் இல்லை ஆனாலும் முதுபெரும் அரசியல்வாதிகளுக்கே தண்ணி காட்டியவர்.

2) தனக்கு எம்.ஜி.ஆர். மூலம் கிடைத்த அரசியல் அங்கீகாரத்தைக் கொண்டு அவரை விட கறாரான ஆளுமையாக தன்னை ஆக்கிக்கொண்டு மொத்த அ.தி.மு.க வும் தான் மட்டுமே என்ற பிம்பத்தை நிறுவியது.

3) ஒரு கட்சியை, அரசை வெற்றிகரமாக நடத்த வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்கள் தேவை இல்லை என நிரூபித்தது.

4) "தலைமைக்கு எதிராக நாம் எது செய்தாலும் அவருக்கு எப்படியும் தெரிந்து விடும்"- என்ற நிரந்தரமான ஒரு பயத்தை கட்சியின் ஒவ்வொரு கட்ட தலைவர்களிடம் கொண்டு வந்து அதனை கட்டி காப்பது ஹிட்லருக்கு பின் இவர்தான்.

5) 3 முறை முதல் அமைச்சராக இருந்தும் உருப்படியாக எதையுமே செய்யாதவர். சமூகத்தின் மீதோ, வாக்களித்த மக்களின் மீதோ எந்த ஒரு பயமும், குறைந்த பட்ச அக்கறையும் இல்லாதவர்.
தான் செய்வது எந்த வகையிலும் சரியல்ல என்பது தெரிந்தும் தவறுகளை பகிரங்கமாக செய்பவர்.
மு.க. இவரை விட மெகா  ஊழல்களை செய்தாலும் அனைத்தும் திரைமறைவில் விஞ்ஞானப் பூர்வமாக நடக்கும். பொதுமக்களிடம் ஒரு குறைந்த பட்ச பயம் இருக்கும். வாக்களித்தவனுக்கு தெரிந்தால் சிக்கலாகிவிடுமே என்ற பயம் இருக்கும். இப்படி நான் சொல்லுவது மு.க வுக்கு பூச்செண்டு குடுப்பது என்பது ஆகாது.ஆனால் இவர் அப்படி எல்லாம் மெனக்கெடுவது இல்லை. எதையுமே மத யானையின் விவேகத்தோடுதான் செய்வார். இதனை தன்னம்பிக்கை, மன உறுதி.. என்று நம்மை நம்ப வைத்தது எல்லாம் "சோ" போன்ற அறிவுஜீவிகளின் வேலை.

6) தனிமனித துதி யின் உச்சக்கட்டத்தை தமிழக மக்கள் பார்க்க கொடுத்துவைத்தது இவரால் தான்.
சாதரணமாக யாருமே கேட்க கூச்சப்படும் துதிகளை ஜஸ்ட் லைக் தட் கேட்டு அனுபவிக்க தனி திறமை வேண்டும். தன்னை விட வயதில் மூத்தவர்களைக் கூட காலில் விழ வைத்து பார்த்தது பரவலாக பேசப்பட்டாலும் அதுவே இவரின் அடையாளமாகிப் போனது.
இதனை எல்லாம் பீகார், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் செய்தால் அது பெரிய விஷயம் இல்லை.
தமிழ்நாடு ஓரளவுக்கு விழிப்புணர்ச்சி அடைந்த மாநிலம் தான். மல்லுக்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஓரளவு நல்லது கெட்டது பிரித்து பார்க்க தெரிந்த நம்மிடையே இதை செய்வது நிஜமாகவே சாதனைதான்.

ஜெயலலிதா இங்கு நடந்து கொள்வது போல கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தால் என்றைக்கோ அரசியலில் இருந்து மூட்டை கட்டி அனுப்பி இருப்பார்கள். ஆனால் அ.தி.மு.க வினர் இவரை எப்படி மீண்டும், மீண்டும் சகித்துக்கொண்டு சந்தோஷமாக அடிமைத்தனத்தை அனுபவிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

பொதுமக்களுக்கும் இவரின்பால் என்ன ஈர்ப்பு என்பதும் புரியவில்லை. இப்பொழுதும் இவர் நிச்சயமாக ஓடுகின்ற குதிரைதான். அதிமுக வுக்கு விழும் ஓட்டுக்களுக்கு இரண்டே காரணங்கள் தான்.
       1) ஜெயலலிதா
       2) முந்தைய ஆளும் கட்சியின் செயல்பாடுகள் (எதிர்ப்பு அலை)...மற்றபடி தனிப்பட்ட வேட்பாளருக்காக என்று பெரும்பாலும் ஓட்டுக்கள் விழுவது இல்லை.ஜெ. அதை விரும்புவதும் இல்லை.

இவரின் கூட்டணி தர்மம் எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் தா.பா., சரத் குமார் போன்றவர்கள் பொதுவாக எல்லோருக்குமான வகுப்பில் நடத்தும் பாடங்களை கற்றுக்கொள்வதில் விருப்பம் காட்டுவதில்லை. தனியே சிறப்பு வகுப்பு வைத்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அம்மா வேறு வழி இல்லாமல் சிறப்பு வகுப்பு எடுத்ததில் முக்கியமான பாடம் ஒன்றை சமீபத்தில் கற்றுகொண்டார்கள்.
செயல்பாடுகளை பொறுத்து ஓட்டு போடும் அளவுக்கு தமிழ்நாடு முன்னேறி விட்டால் இவர் வி.ஆர்.எஸ். வாங்கவேண்டியதுதான் , ஆனால் எனக்கு ஜெயலலிதா பிடிக்காது ஆனால் ஓட்டு மட்டும் ரெட்டலைக்குதான் என்று கூறும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் இவர் தொடர்ந்து போட்டியில் இருக்கலாம். இவரின் பிரதமர் கனவினை அபத்தம் என்று கூறி அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது.

மு.கருணாநிதி

இந்த நூற்றாண்டின் அக்மார்க் அரசியல்வாதி.
அரசியல்வாதிக்கான இலக்கணங்கள் தரம் குறைய ஆரம்பித்தது இவர் காலத்தில் இருந்துதான்.
சந்தர்ப்பவாதத்தினை இராஜதந்திரம் என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தது இவர் காலத்தில்தான்.
பேசிப்பேசியே நாட்டை ஆள முடியும் என்று நிரூபித்தவர். தமிழ் சினிமாக்களில் அரசியல்வாதிகள் வில்லனாக காண்பிக்கப்படுவதற்கு inspiration இங்கிருந்துதான் வந்தது கூறலாம்.

2006 இல் இவருக்கு கொடுத்த வாய்ப்பினை இவர் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் 2/5 என்ற அளவில் ஆட்சி செய்திருந்தால் கூட இன்று தமிழக மக்களின் மனதில் மகத்தான இடத்தை பெற்று இருந்திருப்பார். என்றும் அழியாத தமிழின தலைவர் என்ற பிம்பம் உருவாகி இருந்திருக்கும்.
ஆனால் தன் குடும்ப, சுய நலனுக்காக இவர் அடித்த அருவருப்பான ஸ்டன்ட்கள், இலங்கை தமிழர் விவகாரத்தில் செய்த துரோகம், 2G அலைக்கற்றை ஊழல் போன்ற விஷயங்கள் இவரின் நம்பகத்தன்மைக்கு வேட்டு வைத்தன.

இப்போது இவரது மகன்களாகிய ஸ்டாலின், அழகிரி இடையே நடக்கும் போர் 2 ஜெயலலிதா வுக்கு சமம். இவரது ஆட்சி காலம் மொத்தத்தையும் கணக்கில் எடுத்து பார்த்தாலும் தமிழ்நாடு பெரிதாக ஒன்றும் முன்னேற்றம் காணவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில வளர்ச்சிப் பணிகள் நடந்திருக்கின்றன. மற்றபடி பெரும்பாலான திட்டங்கள் இவரின் குடும்ப வளர்ச்சிக்காக செய்யப்பட்ட விஞ்ஞான ஊழல்கள் தான். நகர்ப்புறங்களில் கட்டமைப்புக்கள் ஓரளவுக்கு கவனிக்கப் பட்டன. கிராமப் புற மக்களுக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுக்கப்பட்டது.

இவர் ஒரு நிகழ மறுத்த அற்புதம். இவர் மேல் தமிழன் வைத்திருந்த நம்பிக்கையை அற்பமாக்கிய பெருமை இவரையே சேரும். ஆனால் அடுத்து வந்த ஜெயலலிதாவின் ஆட்சி கருணாநிதியே தேவலை என்ற மனப்பான்மையை ஓரளவுக்கு உருவாக்கி வைத்து உள்ளது. கணிசமான கரண்ட் கட் இவருக்கு பெரிய அளவு ஆதரவை பெற்று தர வாய்ப்பு இருக்கிறது.


ராமதாஸ் & கம்பெனி

அப்பாவி மக்களுக்கு சாதி வெறி ஏற்றி அதில் அரசியல் செய்யும் அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவர். ஆட்சியை பிடிக்கும் அளவுக்கெல்லாம் (சட்ட மன்ற தேர்தலில்) இவர்கள் என்றும் வந்து விடப்போவது இல்லை என்பது உண்மை. ஆகவே இது ஒரு விதத்தில் நிம்மதியை கொடுத்தாலும், தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள எத்தனை தருமபுரி, மரக்காணம் சம்பவங்களை அரங்கேற்றுவார்களோ என்று எண்னும்போது அந்த நிம்மதி போய்விடுகிறது.

என்னை பொறுத்தவரை தொடர்ந்து ஒரு 3 தேர்தல்களாவது இது போன்ற சாதி கட்சிகளை சம்பந்தப்பட்ட சமூகத்தினரே புறக்கணிக்க வேண்டும். வேறு தொழிலை பார்க்க போய்விடுவார்கள்.

ராமதாஸ் ஜெயிக்கும் குதிரையை இனம் கண்டு அதன் காலில் விழுந்தாவது பின் முதுகில் தொத்தி கொண்டு விடுவதில் கில்லாடி. ஆனால் கடந்த இரண்டு முறைகளில் சொதப்பி விட்டது.
இந்த முறை கிட்டத்தட்ட ஜெயிக்கும் என பெரும்பாலானோர் நினைக்கும் கூட்டணிக்கு கொஞ்சம் பிகு செய்தாலும் வந்து விட்டார். பார்க்கலாம்..


காங்கிரஸ் (சோனியா, ராகுல், ப.சி., இளங்கோவன், GK.வாசன், ஞானதேசிகன்)

உண்மையில் நான் இவர்கள் பிரச்சாரம் செய்வதை காண மிகுந்த ஆவலாக இருக்கிறேன். குறிப்பாக ப.சிதம்பரம் என்ன சொல்லி மக்களை வாக்கு கேட்பார்?
1) பெட்ரோல் விலை ரூபாய் 45-->75 என மாற்றியதை சொல்லியா?
2) அத்தியாவசிய பொருட்களின் விலை எவரெஸ்ட் அளவுக்கு ஏற்றிய விபரம் சொல்லியா?
3) வேறு எந்த ஆட்சியிலும் நடக்காத மெகா ஊழல்களை நடத்திய சாதனைகளை சொல்லியா?

என்னமோ போங்க....

எனது ஆசை (எதிர்பார்ப்பு) என்ன என்பதை கீழே காணலாம்.

தமிழக அளவில்..

அதிமுக  - 11 சீட்
திமுக   - 8 சீட்
பா.ஜ.க - 15 சீட்
மற்றவை - 5 சீட்

இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்...

தேசிய அளவில்

ப.ஜ.க (தனிப்பட்ட வெற்றி) - 275
கூட்டணியுடன் - 345 இடங்களில் வெற்றி பெறவேண்டும்... இந்த தொங்கு சபை எல்லாம் வேண்டாம். நமது அரசியல் வியாதிகள் அதுக்கு லாயக்கு இல்லை.

பாப்போம்.....

பி.கு.
இந்த கட்டுரையை இப்போது பார்க்கும் போது சற்று குழப்பமாகத்தான் இருக்கும். நான் இதை எழுத ஆரம்பித்தது சில மாதங்களுக்கு முன்னாள். இப்போதான் போஸ்ட் பண்ண சந்தர்ப்பம் கிடைச்சது...
ஹி..ஹி...ஹி...!!!

ஆனால் தேசிய அளவில் எனது விருப்பம் நிறைவேறியது என நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம்...